சிறுவர்களால் கடத்தி, நிர்வாணப்படுத்தப்பட்டதால் 15 வயது சிறுமி தற்கொலை
பெங்களூர்: பெங்களூரில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது 15 வயது சிறுமியை சில சிறுவர்கள் சேர்ந்து கடத்தி நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்ததால் அவமானம் தாங்க முடியாமல் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வடக்கு பெங்களூரில் உள்ள சிக்காலஜாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அவரை சில சிறுவர்கள் கடத்திச் சென்று அவரை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
என் சாவுக்கு கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் தான் காரணம். அவர்களும், அவர்களின் கூட்டாளிகளும் சேர்ந்து நான் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கையில் என்னை கடத்திச் சென்றனர். அவர்கள் என்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர். என் மானம் போனதால் நான் உயிரை விட முடிவு செய்துள்ளேன். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீதி தேவை.
இந்த கடிதத்தை நானே எனது கைப்பட எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவர்கள் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் நேற்று முன்தினம் இது குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
அந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் பொது இடத்தில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தோம். அப்போது கிருஷ்ணமூர்த்தி, மோகன் ஆகிய உறவினர்கள் தன்னை கிண்டல் செய்வதாக அந்த சிறுமி தெரிவித்தார். அவர் தெரிவித்த புகாரை ஏற்றோம் என்றனர்.












Click it and Unblock the Notifications