சிறப்பு மருத்துவ பட்டப் படிப்புகளில் இடஒதுக்கீடு கூடாது- தகுதிதான் அடிப்படை: உச்சநீதிமன்றம் அதிரடி!!
டெல்லி: சிறப்பு மருத்துவப் பட்டப்படிப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக் கூடாது; தகுதி அடிப்படையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், முதுநிலை சிறப்பு மருத்துவப் பட்டப்படிப்புகளில், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது பூர்வீக இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள இட ஒதுக்கீடு முறையில் எந்தவகையான மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதியின் மீது இட ஒதுக்கீடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது உயர்கல்வியின் தரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
தேசத்தின் நலனை கருத்தில் கொண்டும், உயர் கல்வித்துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் இட ஒதுக்கீடு முறையை நீக்கி விட்டு "தகுதி அடிப்படையில்" மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதுதொடர்பாக எந்தவித தாமதமும் இன்றி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொழில் கல்வியில் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை அளிக்கப்பட்டபோது, இச்சலுகை அமலில் இருப்பதற்கான காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை.
தற்போது நாட்டின் பொதுநலன் கருதி, சிறப்பு மருத்துவப் பட்டப்படிப்புகளில் ஜாதி, மதம், இருப்பிடம் என்கிற அடிப்படையில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை மாற்ற வேண்டும்.
இந்திய மருத்துவக் கவுன்சிலும் இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை விரைவில் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் அரசமைப்புச் சட்டத்தின் 371-ஆவது பிரிவின்கீழ், சிறப்பு மருத்துவப்படிப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வருவதற்கு அனுமதி கோரும் மனு மீதான விசாரணை நவம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications