ஜம்முவில் கண்ட இரு நண்பர்களின் கனவு கேரளாவில் நிறைவேறியது!
திருவனந்தபுரம்: இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஜம்மு காஷ்மீரில் ஆரம்பித்த இரு நண்பர்களின் கனவு கேரளாவில் நிறைவடைந்துள்ளது.
கேரளாவின் எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை பயிற்சி அகாடமியில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் இன்று பயிற்சி முடித்து பணிக்கு செல்கின்றனர். இங்கு பிடெக் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும் கர்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த தளத்தில் இருந்து இன்று பயிற்சி முடித்து வெளியேறியுள்ள இரு அதிகாரிகளான அன்குஷ் ஜஸ்ரோட்டியா மற்றும் ராஜிந்தர்சிங் ஆகியோர் ராணுவத்தில் சேருவதை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு முயன்று அதில் இப்போது சாதித்து காண்பித்துள்ளன். முதலாமவர் கேப்டனாகவும், இரண்டாமவர் அட்ஜஸ்டன்ட் ஆகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரது நட்பும் ஜம்மு அருகேயுள்ள காதுவா கிராமத்தில் அரும்பியது. இப்போது மலராகி விரிவடைந்துள்ளது. "நாங்கள் இருவருமே கடல்படையில் சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தோம். 2007ல் நான் கடற்படையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் ஒரு ஆபீசராக வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்தி தள்ளியது.
எனவே எனது நண்பன் ராஜிந்தர் சிங்குடன் சேர்ந்து கடற்படை பயிற்சி அகாடமியில் படிக்க திட்டமிட்டோம். எங்கள் இறுவருக்குமே ஒரே இடத்தில் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு 2010ல் படிக்க ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாக ஆபீசர்களாக படிப்பை முடித்துள்ளோம்" என்கிறார் அன்குஷ்.
இன்று நடந்த பயிற்சி முடிவு விழாவின்போது, அன்குஷ் சிறந்த புராஜெக்ட்டுக்கான விருதை தட்டிச் சென்றார். குடியரசு தலைவர் மெடலும் இவருக்குதான் கிடைக்க உள்ளது. அன்குஷ் தந்தை குல் சரண் சிங் முன்னாள் ராணுவ வீரராகும். அவர் கூறுகையில், நான் பணியில் இருந்தபோது, அரசு கார் ஏன் நமது வீட்டுக்கு வந்து உங்களை அழைத்துச் செல்வதில்லை என்று சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருப்பார். அதற்கு ஆபீசராக வேண்டும் என்று நான் கூறுவேன். அதை வைராக்கியமாக வைத்து இப்போது எனது மகன் ஆபீசராகியுள்ளார் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
ராஜிந்தர்சிங் கூறுகையில், எனது குடும்பத்தில் நான்தான் முதல் ஆபீசர். இதற்கு அன்குஷ் நட்புதான் காரணம். டியூசன் படிக்கும்போதே கண்ட கனவு எங்களுக்கு நனவாகியுள்ளது என்றார். பட்டமளிப்பை பார்க்க வந்திருந்த பிகாம் படிக்கும் அவரின் தங்கை பிரியங்கா கூறுகையில், எனது பிறந்தநாளுக்கு எனது அண்ணன் டூவீலர் பரிசளித்தார் என்றார்.