மைசூரில் பையுடன் மோடியின் காருக்கு அருகே ஓடி வந்த நபரால் பதட்டம்
மைசூர்: மைசூரில் பிரதமர் நரேந்திர மோடியின் காருக்கு அருகே மோடி மோடி என்று கூறிக் கொண்டு ஓடி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மைசூருக்கு வந்துள்ளார். மைசூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு மோடி தனது காரில் லலித் மகால் ஹோட்டலுக்கு ஓய்வு எடுக்கச் சென்றார்.

அவரின் கார் வி.வி. சர்க்கிள் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் சாலையோரம் நின்றிருந்த நபர் ஒருவர் காருக்கு அருகே வந்து அதனுடன் ஓடத் தொடங்கினார். கையில் பை ஒன்றை வைத்திருந்த அவர் மோடி, மோடி என்று கூறிக் கொண்டே காருடன் ஓடி வந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரது பையில் என்ன இருந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து மோடி படை என்ற அமைப்பு பிரதமருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டம் நடத்தியது.
மைசூரில் இந்திய அறிவியல் மாநாட்டை மோடி இன்று துவங்கி வைத்தார். அவர் மாநாட்டில் கலந்து கொண்ட 15 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications