என் கையைப் பாருங்கள், ஆயுள் ரேகை நன்றாக இருக்கிறது.. கேஜ்ரிவால் தமாஷ்
டெல்லி: தனக்கு விஐபி பாதுகாப்பு தேவையில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
காரில் வாவ்.. வாவ்.. வாவ் என்று சைரன் ஒலிக்க, சிவப்பு விளக்கு சுழல வலம் வருவதெல்லாம் அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்த அட்டகாசம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில், நமது நாட்டை விட்டு இந்த விஐபி கலாச்சாரத்தை அடித்து விரட்ட வேண்டும். அது நமது அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கடைப்பிடித்த அட்டகாசம் ஆகும். ஆங்கிலேயர்களே போய் விட்டனர். பிறகு எதற்கு அவர்கள் கடைப்பிடித்த பாரம்பரியத்தை மட்டும் நாம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

என்னைப் போலவே அனைத்து மாநில முதல்வர்களும் இந்த விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க முன்வர வேண்டும். அதேசமயம், இது தனிப்பட்டவர்களின் முடிவு சம்பந்தப்பட்டது. நான் போய் யாருக்கு அறிவுரை கூற முடியும். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் பெரியவர்கள். அவர்களுக்கு நான் அறிவுரை கூற முடியாது.
எனது கையில் ஆயுள் ரேகை நன்றாக இருப்பதால் எனக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று நம்புகிறேன். எனவே எனக்கு பாதுகாப்பு என்று எதுவும் தேவையில்லை என்றும் கருதுகிறேன். நீங்களே என் உள்ளங்கையைப் பாருங்கள். தெரிந்து கொள்ளலாம்.
எனக்கு அதிகாரிகள் கொடுத்த பெரிய வீடுகளை நான் நிராகரித்து விட்டேன். சிறிய வீடுகளாகப் பாருங்கள் என்று கூறியுள்ளேன். பலர் என்னைத் தொடர்பு கொண்டு பெரிய வீட்டுக்குப் போவது சரியல்ல என்று கூறினர். அவர்களது நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பவில்லை. எனவே எனக்குத் தரப்பட்ட வீடுகளை நான் நிராகரித்து விட்டேன் என்றார் கேஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications