4 ஆண்டுகளாக பல இடங்களில் வைத்து பலாத்காரம்: பிரபல சாமியார் மீது பக்தை புகார்!
பெங்களூர்: பலாத்கார புகாருக்கு உள்ளாகியுள்ள கர்நாடகாவை சேர்ந்த பிரபல மடாதிபதி ராகவேந்திர பாரதி சுவாமிகளை கைது செய்ய தடை விதிக்க கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ளவர் ராகவேந்திர பாரதி. இவரது ஆசிரமத்தின் பக்தையாக இருந்தவர் பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த பிரேமலதா. இவருக்கு திருமணமாகி இளம் வயதில் அம்சுமதி சாஸ்திரி என்ற பெண் பிள்ளை உள்ளது. ஆசிரமம் நடத்தும் ராமகதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரேமலதா, ராமர் பக்தி பாடல்களை பாடிவந்துள்ளார்.
ஆண்டவரின் கிருபை இறங்குகிறது..
இந்நிலையில், ராகவேந்திர பாரதி சுவாமி, 2011ம் ஆண்டு ஒருநாள், பிரேமலதாவிடம் வந்து உன்மீது கடவுள் மிகுந்த அன்பு வைத்துள்ளார், உன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த அவர் சித்தமாகியுள்ளார் என்று கூறி ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார். இப்படியே அவ்வப்போது அவரை புகழ்ந்து வந்த சாமியார், ஒருநாள், உன்மீது கடவுளின் கிருபை இறங்கப்போகிறது என்று கூறி, ஆசிரமத்தில் தனது அறையில் வைத்து பிரேமலதாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சத்தியமாக சொல்ல கூடாது
இதன்பிறகு, பிரேமலதாவை அழைத்துச் சென்று ராமர் சிலையின் முன்பு நிறுத்தி, இங்கு நடந்ததை வெளியே யாரிடமும் சொல்கக்கூடாது என்று வலுக்கட்டாயமாக சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் சாமியார் சுற்றுப்பயணம் செய்யும்போது, பிரேமலதாவையும் அழைத்துச் சென்று அங்கு வைத்தெல்லாம் இதேபோல பலாத்காரம் செய்துவிட்டு சத்தியம் வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வெளியே சொல்லாத பக்தை
சில நேரங்களில் பிரசாதம் என்று கூறி சாமியார் அளிப்பதை சாப்பிட்ட பிரேமலதா சுய நினைவை இழந்துவிடுவாராம். அப்போதெல்லாம் சாமியார் அவரை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 2011ல் ஆரம்பித்து இந்த ஆண்டு (2014) வரை தொடர்ந்து பல முறை இதுபோல சாமியார் தன்னிடம் நடந்து கொண்ட போதிலும், பிரேமலதா தனது கணவன் உள்ளிட்ட யாரிடமும் அதுகுறித்து கூறவில்லை. இந்நிலையில், ரத்தப்போக்கு, தலைவலி போன்ற பிரச்சினை பிரேமலதாவுக்கு அதிகரித்துள்ளது. இதை எடுத்துக்கூறியும், தனது ஆசைக்கு இணங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சாமியார், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.
போலீசில் புகார்
இதையடுத்து கோபமடைந்த பிரேமலதா தனது மகளிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அம்சுமதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம்தேதி பெங்களூர் பனசங்கரி காவல் நிலையத்தில் சாமியாருக்கு எதிராக புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, கர்நாடக ஹைகோர்ட்டை அணுகிய சாமியார் தரப்பு, சமூகத்தில் தனக்குள்ள நற்பெயரை கெடுக்க அப்பெண் குடும்பம் சதி செய்வதாகவும், ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்து இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரப்பட்டது. மேலும், கைது செய்வதற்கு ஸ்டே கொடுக்குமாறும் கோரப்பட்டது. இதையேற்ற ஹைகோர்ட் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
கைது செய்ய வாய்ப்பு
மேலும், இந்த மனு மீதான விசாரணையை நடத்தியது. வாத பிரதிவாதங்களின் முடிவில் சாமியார் மீதான புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதை உணர்ந்த ஹைகோர்ட் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், சாமியார் மீதான வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடையை விலக்கிக்கொள்வதாகவும், தேவையேற்பட்டால் விசாரணை அதிகாரிகள் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியுள்ளது. விசாரணைக்கு கோர்ட் குறுக்கே நிற்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துவிட்டது. எனவே எந்த நேரத்திலும் சாமியார் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது.