ஸ்ரீநகர் பேரணியில் பாக். கொடி... மஸ்ரத் ஆலம் மீண்டும் கைது! கிலானிக்கும் வீட்டுக் காவல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி வந்த விவகாரத்தில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் திரும்பிய ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானிக்கு நேற்று முன் தினம் ஸ்ரீநகரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டன. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் மஸ்ரத் ஆலமோ, மக்கள் தங்களது உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தினர் என்று நியாயப்படுத்தியிருந்தார்.
ஆனாலும் மஸ்ரத் ஆலமை கைது செய்தாக வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்த உடனேயே மஸ்ரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராணுவத்தால் 2 இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி புல்வாமா மாவட்டம் திரால் நகரில் இன்று பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்க கிலானி திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் கிலானியை அதில் பங்கேற்க விடாமல் போலீசார் அவரை தடுத்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அவரது வீடு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி நடைபெற உள்ள திரால் நகரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications