13 பெண்களை கொன்ற சீரியல் ரேபிஸ்ட் 'சைக்கோ' சங்கர்... பெங்களூரு சிறையில் தற்கொலை!
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 13 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சீரியல் கொலையாளி சைக்கோ சங்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
பெங்களூரு : தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 13 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றது, நகைகளை கொள்ளையடித்தது உள்ளிட்ட வழக்குகளில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சீரியல் கொலையாளி சைக்கோ சங்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அமைக்கப்பட்டிருந்த 41 வயது சீரியல் ரேபிஸ்ட் சைகோ சங்கர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். அதிகாலை 2.15 மணியளவில் சிறைத்துறையினர் வழக்கமான சோதனைக்காக வந்துள்ளனர். அப்போது ஜெய்சங்கர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான், அவனுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் விக்டோரியா மருத்துவமனைக்கு ஜெய்சங்கர் அழைத்து செல்லப்பட்டுள்ளான்,ஆனால் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஜெயலில் இருந்து தப்பிக்க ஜெய்சங்கர் முயற்சித்துள்ளான், ஆனால் அவன் போலீசாரிடம் சிக்கியதால் மீண்டும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டான். இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக ஜெய்சங்கர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனது அறையில் இருந்த ஷேவிங் பிளேடை பயன்படுத்தி ஜெய்சங்கர் கழுத்தை அறுத்துள்ளான்.
2013ம் ஆண்டு செப்டம்பரில் உயர் பாதுகாப்பு கொண்ட பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பி பரபரப்பை ஏற்படுத்தியவன் ஜெய்சங்கர். தனது சிறைக்கதவிற்கு போலி சாவி தயாரித்து, போர்வையை கயிறாக பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்தான். இந்த சம்பவத்தால் 11 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பிறகு பரப்பன அக்ரஹாரா அருகில் உள்ள ஏரிப் பகுதியில் போலீசிடம் மீண்டும் சிக்கினான், அது முதலே சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஜெய்சங்கர் என்று சொல்வதை விட சைக்கோ ஜெய்சங்கர் என்றாரே அதிகம் பேருக்கு தெரியும். 2009ம் ஆண்டில் முதன் முதலில் ஓசூரைச் சேர்ந்த பெண் ஒருவரை பலாத்காரம் செய்து நகைகளைத் திருடியதோடு அந்தப் பெண்ணை கொலையும் செய்துவிடுவான். இதே போன்று தமிழகத்தில் 11 பெண்களையும் கர்நாடகாவில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேரையும் கொன்றுள்ளான்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக் பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்வது தான் இந்த சீரியல் கொலையாளியின் ஸ்டைல். 32 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெய்சங்கருக்கு தனிமைச் சிறையில் இருந்ததால் மனநல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.