நாடாளுமன்ற வளாகத்தில் கடும் மோதல்! பாஜக எம்பிக்கள் மண்டை உடைப்பு- முகேஷ் ராஜ்புத் எம்பி சீரியஸ்!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி, பாஜக எம்பிக்களுக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
அண்ணல் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு நாடாளுமன்றம் முதல் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்பிக்கள் இடையே கடுமையான மோதலும் ஏற்பட்டது.

மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் நீல நிற உடைகளில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு பாஜக கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அப்போது நாடாளுமன்றத்துக்குள் செல்ல லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முயற்சித்தார். ஆனால் பாஜக எம்பிக்களோ அவரைத் தடுத்து தள்ளிவிட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது.
இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி மண்டை உடைந்தது. அவர் தலையில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் வீல் சேரில் அமர வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் எம்பியும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எம்பிக்களுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே நாடாளுமன்றத்துக்குள் தங்களை நுழையவிடாமல் தடுத்த பாஜக எம்பிக்கள் மீது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்பிக்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications