விபச்சார வழக்கால் ஆடிப்போன போராளிகள்.. 'கிஸ் ஆப் லவ்' என்றாலே இப்போ கேரளா 'கப்சிப்'
திருவனந்தபுரம்: ஆன்லைன் செக்ஸ் மோசடியில் 'கிஸ் ஆப் லவ்' போராட்டக்காரர்கள் சிக்கியதால், கேரளாவில் அந்த போராட்டத்திற்கு ஆதரவு படிப்படியாக குறைந்துவிட்டது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கேரளாவின் கோழிக்கோட்டில், ஆணும், பெண்ணும் நெருக்கமாக காதல் செய்ததை பார்த்த இந்து அமைப்பினர் சிலர், அவர்களை தாக்கப்போய், வெடித்தது 'கிஸ் ஆப் லவ்' போராட்டம். இதை முன்னின்று நடத்தியது ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவியும் மாடலுமான ரஷ்மி நாயர்.

பொது இடங்களில் முன்பின் அறிமுகமில்லாத இளம் பெண்களும், ஆண்களும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டு, நாங்கள் அன்பால் இதை செய்கிறோம். இதில் காமம் இல்லை என்று கூறுவது 'கிஸ் ஆப் லவ்' பிரச்சாரத்தின் மையக்கருத்து.
பாரம்பரியம் மிக்க கேரளாவில் இதுபோன்ற போராட்டத்திற்கு பெரியவர்கள் ஆதரவு தரவில்லை என்றபோதிலும், 'மாரல் போலீசிங்' எனப்படும், பிறர் நமது சுதந்திரத்தில் தலையிடும் போக்கை வளரவிட்டுவிட கூடாது என்ற நோக்கத்தில் 'கிஸ் ஆப் லவ்' சக்சசாக நடத்தப்பட்டது. பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில், பெண்ணியவாதிகளும், பல்வேறு ஆங்கில ஊடகங்களும் 'கிஸ் ஆப் லவ்' போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவை கொடுத்து வந்தன.
இந்நிலையில், 'கிஸ் ஆப் லவ்' நடத்திவந்த ரஷ்மி நாயரும், அவரது கணவரும், பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 'கிஸ் ஆப் லவ்' என்ற போராட்டமே, வாடிக்கையாளர்களை பிடிக்க உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்ற தோற்றம் கேரள மக்களிடையே உருவாகியுள்ளது.
இதனால் 'கிஸ் ஆப் லவ்' போராட்டம் என்றாலே, கடும் எதிர்ப்பு கிளம்ப தொடங்கியுள்ளதாம். அதில் பங்கேற்ற பல இளைஞர்களும், அந்த வகை போராட்டத்தை கைவிட ஆரம்பித்துள்ளனர். 'நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட போராட்டம், தலைவரின் செயலால் இப்படி போய்விட்டதே..' என ஆங்கில ஊடகங்கள் வருத்தத்தோடு செய்திகளை பகிர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications