ஷாருக் கார் மீது கல்வீச்சு... குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
அகமதாபாத்: நடிகர் ஷாருக் கானின் கார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த கல்வீச்சுச் சம்பவம் இன்று காலை நடந்தது. இருப்பினும் சம்பவத்தின் போது ஷாருக் கான் காரில் பயணிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அடையாளம் தெரியாத சிலர் திடீரென ஷாருக் கான் கார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
ரயீஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் தற்போது ஷாருக் கான் பிசியாக உள்ளார். அதில் சில காட்சிகளை குஜராத்தில் படமாக்குகின்றனர். இதற்காக குஜராத் வந்துள்ளார் ஷாருக்.
Actor Shahrukh Khan is shooting for his upcoming film 'Raees' in Ahmedabad (Gujarat).
— ANI (@ANI_news) February 14, 2016
சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக முன்பு கருத்து தெரிவித்திருந்தார் ஷாருக் கான். அது முதலே அவருக்கு எதிராக சிலர் தொடர்ந்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக சிவசேனா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாஜகவினரும் கூட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக ஆட்சியின் கீழ் உள்ள குஜராத்தில் ஷாருக் கான் கார் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.