வி.கே.சிங்.. ஒரு முன்னாள் ராணுவ தளபதி பேசும் பேச்சா இது?
டெல்லி: ஹரியானாவில் 2 தலித் பிஞ்சுகளை ஜாதிய பயங்கரவாதம் எரித்துப் படுகொலை செய்தது.. இந்த படுகொலைச் சம்பவத்தை நாய்களோடு ஒப்பிட்டுப் பேசி "பொறுப்புமிக்க பதவி வகித்த மிகமோசமான மனிதர்" என தம்மை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் வி.கே.சிங்...
அமைச்சர்கள் என்றால் அரசியல்வாதிகள்.. அவர்கள் எதுவும் பேசுவர். ஆனால், நாட்டின் ராணுவ தளபதியாக இருந்தவர் வி.கே.சிங். ஒட்டுமொத்த தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க பதவி அது.. அந்தப் பதவியில் இருந்து அமைச்சரான ஒருவர் எப்படி கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும், பேச வேண்டும்.

அந்தப் பொறுப்பும் கட்டுப்பாடும் வி.கே.சிங்கிடம் எப்போதும் இருந்ததில்லை. தமது பதவி காலத்திலேயே ராணுவத்திலும் கூட ஊழல் அதிகரித்துவிட்டது... முதலில் ஆயுத தரகர்களை பிடித்து உள்ளே போட வேண்டும் என சர்ச்சையாகப் பேசியவர் (ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை, வெறும் பேச்சு தான்).அத்துடன் நாட்டின் முக்கிய துறைகளில் அங்கிங்கெனாதபடி ஊழல் மலிந்து போய்கிடக்கிறது.. ஊழலே ஒரு சட்டமாகிற நிலைமை உருவாகிட்டது என்றெல்லாம் அங்கலாய்த்தவர் வி.கே.சிங்.
மேலும் டாட்ரா கவச வாகனங்களை வாங்க ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர்சிங் தமக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று பதவி காலத்திலேயே பெரும் குண்டை வீசியவர் வி.கே.சிங்.
தமது பதவியின் கடைசி காலத்தில் 2012ம் ஆண்டில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிப் போனார்... அவரது ஓய்வு பெறும் வயது குறித்து நாடே விழுந்து விழுந்து விவாதித்தது..
வி.கே.சிங்கின் பிறந்த தேதி 1950ம் ஆண்டு மே 10 என்றது சில ஆவணங்கள்.. ஆனால் நான் 2013-ல் தான் ஓய்வு பெறுவேன்.. 1951ம் ஆண்டு மே 10தான் என்னுடைய பிறந்த தேதி என அடம்பிடித்தார்.. ஆனால் அரசு உத்தரவுப்படி வேறு வழியில்லாமல் 2012ம் ஆண்டு மே 31-ந் தேதி அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்..
தமது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரும் கூட ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஆதர்ஷ நாயகர்களில் ஒருவராக தம்மை காட்டிக் கொண்டார் வி.கே.சிங். அன்னா ஹசாரேவையும் அரவிந்த் கேஜ்ரிவாலையும் மாறி மாறி ஆதரித்தவர் கடைசியில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி சராசரி அரசியல்வாதியானார்.
லோக்சபா தேர்தலில் காசியாபாத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகவும் போட்டியிட்டு வென்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் ஆனார் வி.கே.சிங்.. அப்போதும் அவரது சர்ச்சை சவடால்கள் அடங்கவில்லை...
நாட்டின் அமைச்சராக இருந்து கொண்டு பாகிஸ்தானின் தேசிய தின விழாவில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார்....பின்னர் "ஊடக விபசாரிகள்" என்ற பட்டம் கொடுத்து படாதபாடு பட்டார்... இவையெல்லாம் கூட அரசியல் சார்ந்தவை..
ஆனால் ஹரியானாவில் ஜாதிய பயங்கரவாதத்தால் 2 தலித் பிஞ்சு குழந்தைகள் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்... நாட்டில் ஜாதிய மதவெறி பயங்கரவாதத்தின் உச்சங்கள் அரங்கேறி வரும் நிலையில் 2 தலித் பிஞ்சுகளும் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து ஒரு மத்திய அமைச்சராக இருக்கும் வி.கே.சிங் தெரிவித்த கருத்து, நாய்கள் மீது கல்லெறிவதற்கெல்லாம் மத்திய அரசை குறை கூறினால் எப்படி? என்பதுதான்..
இதற்கு வியாக்யானம், விளக்கம், மன்னிப்பு... நாவினால் சுட்ட வடு ஆறாது என்பது அய்யன் திருவள்ளுவன் 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது என்பதை வி.கே.சிங் எங்கே அறிவார்?
இவரைப் போன்ற ஒருவர் அமைச்சராக இருப்பதைக் கூட ஜீரணிக்கலாம், ஆனால், பெருமைமிகு, பொறுப்புமிகு இந்த தேசத்தின் ராணுவ தளபதியாக இருந்ததை நினைத்தால் தான் .... !!












Click it and Unblock the Notifications