நர்ஸ் அருணாவை சீரழித்தவர் உ.பி.யில் குடும்பத்துடன் சந்தோஷமாக உள்ளார்
லக்னோ: மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் நர்ஸ் அருணா ஷென்பக்கை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய வார்டு பாய் உத்தர பிரதேசத்தில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய அருணா ஷென்பக்கை அதே மருத்துவமனையில் வார்டு பாயாக இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சோஹன் லால் பாரதி வால்மிகி என்பவர் கடந்த 1973ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அருணா கோமா நிலைக்கு சென்றார்.
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த அருணா கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் அருணாவை இயற்கைக்கு புறம்பான வழியில் பலாத்காரம் செய்த
சோஹன்லால் இருக்கும் இடம் தெரிய வந்துள்ளது.

உ.பி.
அருணாவை பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறையில் இருந்த சோஹன்லால் 1980ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது மாமனார் ஊரான பார்பா கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தாத்ரியில் உள்ள என்டிபிசி நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

அருணா
நர்ஸ் அருணா எப்பொழுது பார்த்தாலும் தன்னை குறைகூறிக் கொண்டிருந்ததாகவும் விடுப்பு கேட்டதற்கு தன்னை மிரட்டியதாகவும் சோஹன்லால் தெரிவித்துள்ளார். நாய்கள் என்றால் எனக்கு பயம். இந்நிலையில் அருணா என்னை நாய்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்யுமாறும், அவற்றுக்கு உணவு அளிக்குமாறும் கூறினார். இது குறித்து நான் உயர் அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை.

சீட்டாட்டம்
அருணா வேலை நேரத்தில் வார்டு பாய்கள் உள்ளிட்ட சிலருடன் சீட்டாட்டம் ஆடினார். இதை நான் அவரின் உயர் அதிகாரியிடம் தெரிவிப்பேன் என்றேன். உடனே என்னுடன் சண்டைக்கு வந்தார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டோம். கோபத்தில் ஏதோ நடந்துவிட்டது என்றார் சோஹன்லால்.

பலாத்காரம்
இருட்டில் நாங்கள் சண்டை போட்டோம். அவரை நான் பலாத்காரம் செய்யவில்லை. யாரோ செய்த குற்றத்தை என் மீது சுமத்திவிட்டனர். நான் தற்போது மது, பீடி ஆகிய கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டேன் என்று சோஹன்லால் தெரிவித்துள்ளார்.

மனைவி
எனக்கு ஒரு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள், 3 பேரக் குழந்தைகள் உள்ளனர். என் மகள் நான் சிறையில் இருக்கையில் நான் செய்த தவறை ஏற்க முடியாமல் இறந்துவிட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பல ஆண்டுகள் என் மனைவியை நான் தொடவில்லை. நான் விடுதலையான பிறகு 14 ஆண்டுகள் கழித்து எனக்கு ஒரு மகன் பிறந்தான் என்றார் சோஹன்லால்.

தெரியாதே
இந்த சோஹன்லால் தான் அருணாவை சீரழித்து தாக்கியவர் என்று இத்தனை நாட்கள் எங்களுக்கு தெரியாது என்று பார்பா கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் நல்ல விதத்தில் நடந்து கொள்வதால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்கிறார்கள் கிராமத்தினர்.












Click it and Unblock the Notifications