பாட்னாவில் குண்டு வெடித்தபோது பாலிவுட் விழாவில் உள்துறை அமைச்சர்: பா.ஜ.க கண்டனம்

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசாரக் கூட்டத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. ஞாயிறு காலையில் பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 8 குண்டு வெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என்று பாஜக குறை கூறி வருகிறது.
இதற்கிடையே குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்திற்குப் பிறகு மும்பையில் நடந்த ரஜ்ஜோ இந்திப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கலந்துகொண்டார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பை ஏற்றிருக்கும் ஷிண்டே, அவரது ஊரைச் சேர்ந்த விஸ்வாஸ் பாட்டீல் இயக்கிய படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
"பாட்னாவில் குண்டுவெடிப்பு நடந்திருக்கும் போது நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கிறார். இது காங்கிரஸ் உள்துறை அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களின் பழக்கமாக மாறிவிட்டது.
நல்லாட்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தங்கள் ஆடைகள் மற்றும் இசையில் கவனம் செலுத்துகிறார்கள்" என்று மாநில பாஜக தலைவர் சித்தார் நாத் சிங் நிருபர்களிடம் கூறினார்.
குண்டுவெடிப்பு நடந்தது முதல் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பை அனுப்பி வைத்ததாகவும் அமைச்சர் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை பாஜக ஏற்க மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications