ராகுலை பிரதமர் ஆக்குவதே காங்கிரசின் முக்கிய நோக்கம்: ஷிண்டே ‘திடீர்’ பல்டி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்று உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடுகையில், ‘சரத்பவார் தனது அரசியல் குரு என்றும், அவர் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன்' என்றும் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் பிரதம வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், ஷிண்டே இவ்வாறு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று மும்பையில் சரத்பவாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவது இல்லை' என பதிலுரைத்தார். ஆனால் ஷிண்டேவின் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதேபோல் பாட்னாவில் தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளரான தாரிக் அன்வரிடம், ஷிண்டே கூறியது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் சரத்பவார் இல்லை என்று பதில் அளித்தார். அதேசமயம், பொதுவாழ்க்கையில் அனுபவம் மிக்க சரத்பவாருக்கு பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன என்றும் கூறினார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஷிண்டே, ‘சரத்பவார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று நான் கூறவில்லை. அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் எனது நண்பர் என்றும் கூறியதோடு, மராட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என்றுதான் கூறினேன்" என விளக்கமளித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியை அடுத்து பிரதமர் ஆக்குவதே காங்கிரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications