Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசேனாவின் 'உதார் டிராமா' .. மகா. கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க வெளியேறலாமாம்...

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா கூட்டணி அரசில் இருந்து பாரதிய ஜனதா அரசு வெளியேறலாம் என்று சிவசேனா மிரட்டல் விடுத்திருப்பது ஆச்சரியத்தையும் நகைப்பையும் உருவாக்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா இணைந்த கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. அண்மையில் ஜெயின் மதத்தினர் திருவிழாவையொட்டி மாட்டிறைச்சிக்கு தடை விதித்து பாரதிய ஜனதா வசம் உள்ள மாநகராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து மாட்டிறைச்சி விற்பனையில் குதித்தது. இதற்கு ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவும் ஆதரவு அளித்திருந்தது.

Shiv Sena asks BJP to quit Maha. govt.

இந்நிலையில் மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளராக இருந்த சுதீந்தரா குல்கர்னி ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் சுதீந்தரா குல்கர்னியின் முகத்தில் கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குல்கர்னி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வரான பா.ஜ.கவின் தேவேந்திர பட்னவிஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சிவசேனாவின் இந்த நடவடிக்கையால் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று கொந்தளித்திருந்தார். பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் இதனை வன்மையாகக் கண்டித்திருந்தார்.

ஆனால் சிவசேனாவோ, குல்கர்னி மீது கருப்பு மை வீசியது மிகச் சாதாரணமான ஒரு எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமே என்று கூறியிருந்தது. அத்துடன் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், சுதீந்தரா குல்கர்னியும் மும்பையில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப்பும் ஒன்றுதான். இவர்கள்தான் இந்த நாட்டின் தேசப்பற்றை படுகொலை செய்கிறார்கள் என்று மிகக் கடுமையாகவும் சாடியிருந்தது.

இந்நிலையில் பாரதிய ஜனதாவின் இந்த எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், குல்கர்னிக்கு எதிரான எங்களது போராட்டத்தால் மாநிலத்துக்கு கெட்ட பெயர் வந்து விட்டதாக முதல்வர் சொல்கிறார். அவர் மகாராஷ்டிரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. அவரது கருத்தும், குல்கர்னிக்கான அவரது ஆதரவும்தான் மாநிலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது.

குல்கர்னியின் முகத்தில் கருப்பு சாயம் பூசியது, மகாராஷ்டிராவின் நலனுக்காகத்தான். அதை பா.ஜ.க. ஆதரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு உபதேசம் செய்கிறது. முதலில், நாட்டுப்பற்றுடன் தொடர்புடைய ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்னை ஆகியவை பற்றி பா.ஜ.க. பேசட்டும்.

எங்கள் கட்சியின் தேசப்பற்று சார்ந்த நடவடிக்கைகள் பிடிக்காவிட்டால் மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க. வெளியேறலாம் என்றார்.

மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையுடன் இருப்பது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் 63 இடங்களை மட்டுமே வைத்திருக்கும் சிவசேனாவோ, கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க. வெளியேறலாம் என்று கூறியிருப்பது கேலிக்குரியதாக இருக்கிறது.

சிவசேனாவைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடியாத நிலையில் பலவீனமாக இருக்கிறது. அதே நேரத்தில் நாங்களும் இருக்கிறோம் எனக் காட்டுவதற்காக பீகாரில் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டி; மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு எதிராக கலகக் குரல் என அடுத்தது நாடகங்களை நடத்திப் பார்க்கிறது சிவசேனா.

இது குறித்து ஒன் இந்தியாவிடம் கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா பா.ஜ.க மூத்த தலைவர்கள், சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறினால் எங்களை வேறு சில கட்சிகள் ஆதரிக்கும். இது சிவசேனாவுக்கும் நன்றாக தெரியும். கூட்டணி அரசில் சிவசேனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை... இதுவும் சிவசேனாவுக்கு நன்கு தெரியும். சில உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தல்களில் தங்களது ஆதரவாளர்களைத் தக்க வைக்க இதுபோன்று சிவசேனா பேசிவருகிறது என்று கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 122; சிவசேனாவுக்கு 63; காங்கிரஸுக்கு 42; தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 41 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மொத்தம் 288 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

தற்போதைய நிலையில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி முறிந்தால், பா.ஜ.க.வை தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது. இது சிவசேனாவுக்கு நன்கு தெரியும் என்றபோதும் தங்களது இருப்புக்காக இத்தகைய நாடகங்களையும் மிரட்டல்களையும் சிவசேனா மேற்கொள்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+