புதிய அமைச்சர்களுக்கு மோடி 'டீ பார்ட்டி': சிவசேனா ஆப்சென்ட்
டெல்லி: மோடி தனது அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்கு இன்று தேநீர் விருந்து அளித்தார். அந்த விருந்து நிகழ்ச்சியை சிவசேனா புறக்கணித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். முன்னதாக அவர் தனது அமைச்சரவையின் புதிய உறுப்பினர்களுக்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார்.
அந்த விருந்தில் பிரபல துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராஜிவ் பிரதாப் ரூடி, பாஜக தலைவர் ஹன்ஸ் ராஜ் அஹிர், அஜ்மீரைச் சேர்ந்த எம்.பி. சாவார் லால் ஜாட், பீரேந்தர் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி, மோகன்பாய் குந்தாரியா, பண்டாரு தத்தாத்ரேயா, ராம் க்ரிபால் யாதவ், மகேஷ் சர்மா, ஜெயந்த் சின்ஹா, தெலுங்கு தேசம் கட்சியின் ஒய்.எஸ். சவுத்ரி, முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா கூட்டணி விஷயத்தில் பாஜக-சிவசேனா இடையே இன்னும் ஒரு ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு சிவசேனாவின் அனில் தேசாய் தேநீர் விருந்தை புறக்கணித்தார்.
மேலும் சிவசேனா இன்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவையும் புறக்கணித்தது.