மக்களை ஒரு முறைதான் முட்டாளாக்க முடியும் என்பதை நிரூபித்த பீகார் தேர்தல்- மோடி மீது சிவசேனா தாக்கு!
மும்பை: பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஒருமுறைதான் முட்டாளாக்க முடியும் என்பதை பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது சிவசேனா.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. ஆனால் பாரதிய ஜனதாவை தொடர்ந்து மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்து வருகிறது சிவசேனா.

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியிருந்தார். இன்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் பீகார் தேர்தலை முன்வைத்து பாரதிய ஜனதாவை வெளுவெளு என வெளுத்துக் கட்டியுள்ளது.
சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:
டெல்லி சட்டசபை தேர்தலை விட பீகார் தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நிதிஷ்குமாருக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது.
என்னதான் அதிகாரம், பணம், அறிவிப்புகள் என அனைத்தையும் பயன்படுத்தியபோதும் பாரதிய ஜனதா கட்சியால் 60 இடங்களைக் கூட பெற முடியவில்லை. அதன் கூட்டணிக் கட்சிகளோ 20 அடி படுபாதாளத்தில் புதைந்து போய்விட்டன.
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. குண்டர்கள் ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார். அதிகாரத்தையும் பணத்தையும் அவர் பயன்படுத்தவில்லை.
பிரசாரத்தின் போது எளிமையைத்தான் கடைபிடித்தார். நாகரீகமற்ற வார்த்தைகளை அவர் பேசவில்லை. இதுதான் அவரது வெற்றிக்கு காரணம்.
அதிகாரத்தை, பணத்தை வைத்துக் கொண்டு ஒருமுறைதான் தேர்தலில் வெல்ல முடியும். உங்களால் ஒருவரை ஒருமுறைதான் முட்டாளாக்க முடியும்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததற்காக பாகிஸ்தானில் பட்டாசு எதுவும் வெடிக்கவில்லை (தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பிரசாரத்தின் போது கூறியிருந்தார்). ஆனால் பீகார் மாநிலம் முழுவதிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications