சிவசேனாவினர் அட்டூழியம்: ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்பு கம்பியால் தாக்கி கருப்பு மை வீசிய கொடூரம்!
மும்பை: மும்பையில் சிவசேனா கட்சியினர் ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்பு கம்பியால் தாக்கி கருப்பு மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மையை பூசி சிவசேனாவினர் தங்களது கோர முகத்தை வெளிபடுத்தினர். இந்நிலையில் பொதுமக்கள் முன்பாகவே ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்புக் கம்பியால் தாக்கி மை பூசியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மல்லிகார்ஜூன் பாய்கட். சட்ட விரோதமாக நடக்கும் பல சமூக அநீதிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக வெளி உலகுக்கு கொண்டு வந்தார்.
அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக, லாத்தூர் பகுதியில் 14 ஆயிரம் சதுர அடியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடத்தைப் பற்றிய விவரங்களை, நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அம்பலப்படுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவசேன கட்சியினர் இன்று அவரை அங்குள்ள கல்லூரி ஒன்றிற்கு குண்டுகட்டாக தூக்கி சென்றனர். அங்கு கூடியிருந்த சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் அவரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் கருப்பு மையைப் பூசியுள்ளனர். இதனால் காயமடைந்த பாய்கட் தற்போது லாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குல்கர்னி மீது மை வீசியது மும்பை பிசிசிஐ அலுவலகம் மீது தாக்குதல், பாகிஸ்தானியர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் உட்பட இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் வகையில் பல்வேறு கலாச்சார தாக்குதல்களில் சிவசேனையினர் ஈடுபட்டு வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications