மோடி பேசி விட்டுப் போனதும் இடத்தை "க்ளீன்" செய்த சிவசேனா தொண்டர்கள்!
மும்பை: நாட்டை தூய்மையாக வைத்திருக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் அவர் பேசி விட்டுப் போன இடத்தை சுத்தம் செய்து நூதனமாக பதிலடி கொடுத்துள்ளனர் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு விட்ட சிவசேனா கட்சியின் தொண்டர்கள்.
நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். நேற்று மும்பையின் மகாலட்சமி பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இன்று காலை அந்த மைதானத்தில் சிவசேனா கவுன்சிலர் அருண் துத்வட்கர் என்பவர் காலையில் வாக்கிங் வந்தார். அப்போது மைதானத்தில் பாஜகவினர் போட்ட குப்பை குவிந்திருப்பதைப் பார்த்தார். இதையடுத்து தனது கட்சியினரை அங்கு வர வைத்தார். அனைவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆளாளுக்கு துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் அங்கு குவிந்து விட்டனர். அனைத்து குப்பையிலும் ஒரு இடத்தில் சேர்த்து வைத்து பின்னர் அதைதீவைத்துக் கொளுத்தினர்.
நாட்டைத் தூய்மைக்கும் பிரதமர் மோடியின் அழைப்புக்கேற்ப இதைச் செய்ததாக சிவசேனா கட்சித் தொண்டர் ஒருவர் சிரித்தபடி கூறினார்.
கடந்த 25 வருடமாக சிவசேனாவும், பாஜகவும் மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்திருந்தன. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த கூட்டணி சமீபத்தில் முறிந்து போனது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications