இந்தியா-பாக். கிரிக்கெட் தொடர்: பிசிசிஐ தலைமையகத்தை முற்றுகையிட்ட சிவசேனா
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருடனான பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் உறவை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடத்துவது பற்றி பேச பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷஹ்ரியார் கான் மும்பை வந்துள்ளார். அவர் மும்பையில் வைத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங் மனோகரை இன்று சந்தித்து பேசவிருந்தார்.

இந்நிலையில் இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் மனோகரின் அறைக்குள் புகுந்து அவரையும் முற்றுகையிட்டு அவருக்கு எதிராகவும், கானுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். 26/11 தீவிரவாத தாக்குதலில் மும்பையில் பலர் பலியாகியுள்ள நிலையில் பாகிஸ்தானுடன் உறவை தொடரக் கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 20 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் ஸ்டேடியத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கான், மனோகரின் சந்திப்பு மும்பைக்கு பதிலாக டெல்லியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications