தனிக்கட்சி தொடங்குவதாக என்னிடமே சொன்னார் அகிலேஷ் ... போட்டுடைத்த சித்தப்பா சிவ்பால் யாதவ்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியை உடைத்துவிட்டு தனிக் கட்சி தொடங்கப் போவதாக என்னிடமே உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாக அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய பதவிகளில் அவரது குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் யாருக்கு அதிக அதிகாரம் என்கிற போட்டி உருவானது.
இதில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தமது சித்தப்பா சிவ்பால் யாதவ் உள்ளிட்டோரை திடீரென அகிலேஷ் யாதவ் டிஸ்மிஸ் செய்தார். இது அகிலேஷ் யாதவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முலாயம்சிங் யாதவ் கூட்டினார். இதில் கண்ணீர் மல்க பேசிய அகிலேஷ் யாதவ், தாம் தனிக்கட்சித் தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்றார்.
ஆனால் அதே கூட்டத்தில் பேசிய சிவ்பால் யாதவ், தனிக்கட்சித் தொடங்கப் போவதாக என்னிடம்தான் அகிலேஷ் யாதவ் கூறினார். இப்போது அவர் பொய் பேசுகிறார்.
அகிலேஷ் யாதவ் பிறக்கும்போதிருந்தே நான் இந்த கட்சிக்கான உழைத்துக் கொண்டிருக்கிறேன். சமாஜ்வாடி கட்சியில் ஒழுக்கம்தான் முக்கியம்... பொய் பேசுபவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது.
அமர்சிங்கை இங்கே பலரும் எதிர்க்கிறார்கள்... அவர்கள் எல்லாம் அமர்சிங்கின் கால் தூசிக்கு சமமாக முடியுமா?
இந்த கட்சிக்கான நான் எதையுமே செய்யவில்லையா? முலாயம்சிங்குக்கு இந்த சிவ்பால் யாதவ் யார் என்பது தெரியும்? அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்?
இவ்வாறு சிவ்பால் யாதவ் பேசினார்.