மோடியை வாழ்த்தாத சோனியாவிற்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை: வெங்கையா
ஹைதராபாத்: தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமென்ற அடிப்படை இந்திய கலாச்சாரம் கூட சோனியாவிற்கும், ராகுலுக்கும் தெரியவில்லை என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே அறிவித்த படி அக்கட்சியின் பிரதம வேட்பாளர் மோடி விரைவில் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட தினமே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலும், ‘தேர்தல் தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தனர். அப்போது தேதலில் வெற்றி பெற்ற கட்சிக்கு வாழ்த்துக்கள் என பொதுவாக குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையே தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறியதாவது :-
நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் போன்றோர் கூட பாராட்டி விட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் மிகப்பெரியதொரு வெற்றியை பெற்ற மோடிக்கு இதுவரை ஒரு மரியாதைக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற இந்தியர்களின் அடிப்படை கலாசாரமோ அல்லது மரியாதையோ கூட அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை' என இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.