மோடிக்கு ஊமைக்குத்து விட்ட மோகன் பாகவத்.. பாஜக - ஆர்எஸ்எஸ்ஸில் அகலமாகும் விரிசல்? கவனிச்சீங்களா
புனே: பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் இடையே பிரச்சனை உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது" என கூறியுள்ளார். இதன்மூலம் அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளதாகவும், இருவருக்கும் பிரச்சனை உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவராக இருப்பவர் மோகன் பாகவத். பாஜகவுக்கு தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு பக்கப்பலமாக இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளை தான் நாட்டில் பாஜக நடைமுறைப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தான் சமீபகாலமாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது இதுபோன்ற கருத்துகள் எதிரொலிக்க தொடங்கின.
ஆனாலும் கூட இதுபற்றி எந்த கட்சி தலைவர்களும் வெளிப்படையாக விளக்கம் அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய தகவல் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே விரிசல் இருப்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பாகவத் பேசியது தான். அங்கு மோகன் பாகவத் கூறிய கருத்து தான் தற்போது மீண்டும் பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே விரிசல் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதாவது மணிப்பூரில் குழந்தைகளின் கல்விக்காக பணியாற்றிய பைய்யாஜி என்று அழைக்கப்பட்ட ஷங்கர் தினகர் கனே என்பவரின் செயல்களை நினைவு கூறும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"அமைதியாக இருப்பதற்கு பதில் சிலர் மின்னலைப் போல பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மின்னல் வெட்டி முடித்த பின்பு இருள் தான் வரும். சேவகர்களான நாம் தீபத்தைப் போல் பிரகாசித்து தேவைப்படும் போது ஒளிர வேண்டும். மணிப்பூரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் கடினமாகவே உள்ளது. அங்கு பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மணிப்பூரில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். பணிக்கு செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால் சங்க சேவகர்கள் அங்கு அமைதியை உருவாக்க முயன்று வருகின்றனர். என்ஜிஓக்களால் அனைத்து விஷயங்களையும் செய்ய முடியாது. இதனால் சங்கத்தினர் முடிந்த வரை உதவி செய்து வருகின்றனர். மோதலில் ஈடுபடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்'' என்றார்.
மேலும் அவர், ‛‛நாம் கடவுளாக மாற வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது'' என பேசினார். இந்த கருத்து தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏனென்றால் லோக்சபா தேர்தலின்போது பிரதமர் மோடி, ‛‛கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பி உள்ளார். நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை.என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்'' என கூறியது விவாதமானது.
இதன்மூலம் பிரதமர் மோடி தன்னை கடவுள் என நினைத்து பேசியதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடியின் பெயரை கூறாமல் ‛‛நாம் கடவுளாக மாற வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது'' என மோகன் பாகவத் பிரதமர் மோடிக்கு விமர்சனம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications