காவிரி தீர்ப்பு... கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
பெங்களூர்: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் சட்டநிபுணர்களுடன் இன்று ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி வீதம் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு. மேலும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி காவிரி நீர், குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது கர்நாடகா.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் நேற்று புதியதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க கூடாது தமிழக அரசு தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்திற்கு 27ந் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் நகல் இதுவரை கையில் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்ப்படும் என கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மேலும், முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவையும் கூடி இதுபற்றி ஆலோசிக்க உள்ளது. இந்த ஆலோசனையின்போது, கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டாமா, அல்லது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.