எதிர்க்கட்சிகள் கைகோர்த்து முதல்வராவதை தடுத்தன... மீண்டும் முதல்வராவேன்- சித்தராமையா
ஹசன்: 2-ஆவது முறையாக கர்நாடகத்தின் முதல்வராவதை எதிர்க்கட்சிகள் சேர்ந்து கொண்டு தடுத்துவிட்டன என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது பாஜக பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. மஜத குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது.
இந்நிலையில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜகவின் அதிக இடங்களில் வென்றுள்ளதை வைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடியூரப்பா முதல்வரானார். எனினும் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்வாசல்
இதனிடையே கோவா, மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தபடி கர்நாடகத்திலும் வந்துவிட கூடாது என்பதற்காக அதை உடைக்க காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி தேவெ கௌடாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என்றும் அவரது மகன் குமாரசாமிதான் முதல்வர் என்றும் பேரம் பேசினார்.
குமாரசாமி முதல்வர்
இதற்கு ஒப்புக் கொண்ட நிலையில் இருகட்சிகளும் இணைந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தன. பின்னர் குமாரசாமி முதல்வரானார். காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் அமைச்சரவையில் இணைந்தனர்.
மீண்டும் முதல்வராவேன்
இந்த நிலையில் முன்னாள் முதல்வராக இருந்த சித்தராமையா ஹசனில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் முதல்வராவேன். 2-ஆவது முறையாக முதல்வராவதை எதிர்க்கட்சிகள் கைகோர்த்து கொண்டு தடுத்தன.
முதல்வராக முடியவில்லை
எதிர்பாராதவிதமாக என்னால் முதல்வராக முடியவில்லை, ஆனால் இதுவே இறுதி அல்ல. அரசியலில் வெற்றி தேல்வி என்பது சாதாரணமானது என்றார் சித்தராமையா. கூட்டணி ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சிகள் சதி செய்து தான் முதல்வராவதை தடுத்ததாக சித்தராமையா கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குமாரசாமி பேச்சு
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு விழாவில் பேசிய குமாரசாமி, முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூக்கள் நிறைந்த படுக்கையல்ல. அது முட்கள் நிறைந்தது. மக்களுக்காகவே முதல்வர் பதவியில் இருக்கிறேன். நெருக்கடி அதிகரித்தால் ராஜினாமா செய்ய தயார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.