போன வாரம்தான் 39வது பிறந்த நாள் கொண்டாடினார் ராகேஷ்.. சித்தராமையா மகனின் சோக மரணம்
பெங்களூர்: ஈரல், கணையம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார் ராகேஷ் என்பது இதில் கூடுதல் சோகம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா-பார்வதி தம்பதிக்கு, மொத்தம் இரு மகன்கள். இதில் மூத்த மகன் ராகேஷ். இளைய மகன் பெயர் யதீந்திரா.
ராகேஷுக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு என்றபோதிலும், நேரடியாக அவரை சித்தராமையா களமிறக்காமல் காத்திருந்தார். கன்ன சினிமா படம் ஒன்றிலும் ராகேஷ் நடித்துள்ளார். யதீந்திரா டாக்டராக உள்ளார்.
கடந்த வாரம்தான் ராகேஷ் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடினார். இதன்பிறகு பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு, நண்பர்கள் சிலருடன் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் ராகேஷ். அப்போதுதான் தீவிர வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பிரசல்ஸ்சிலுள்ள மருத்துவமனையில், ராகேஷ் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து, வியாழக்கிழமை, சித்தராமையா பெல்ஜியம் புறப்பட்டு சென்றார். அவரது குடும்பத்தாரும் உடன் சென்றிருந்தனர். இந்நிலையில், ஈரல், கணையம், கிட்னி என ராகேஷுக்கு, ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பித்த நிலையில், இன்று அவர் மரணமடைந்தார்.
15 வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் ராகேஷ் கணயம் பாதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து தீவிர உணவு கட்டுப்பாட்டை பின்பற்றியுள்ளார் ராகேஷ். பிறந்த நாள் பார்ட்டி மற்றும் வெளிநாட்டு பயணத்தில் உணவு கட்டுப்பாட்டை ராகேஷ் தவற விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.