விமானத்தில் நான் பாடியதற்காக ஏர்ஹோஸ்டஸ்கள் சஸ்பெண்டா.. இதுதான் சகிப்பின்மை: சோனு நிகாம்!
மும்பை: விமானத்தில் என்னை பாட வைத்ததற்காக விமான ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை உண்மையான சகிப்பின்மையை காட்டுகிறது என பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் வேதனை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல பாடகர் சோனு நிகாம். இவர் கடந்த மாதம் நான்காம் தேதி, ஜோத்பூரிலிருந்து மும்பை வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருடன் பயணித்த மற்ற பயணிகள், சோனுவைப் பாடல் பாடும்படி கேட்டு நச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

அனைவருக்கும் கேட்க வேண்டும் என்ற காரணத்தால், விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கில் அவர் பாடியுள்ளார்.
சோனுவின் பாடலைக் கேட்டு உற்சாகமடைந்த சகபயணிகள், தாங்களும் அவருடன் சேர்ந்து பாடியுள்ளனர். அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சோனு, ‘வாவ் உங்கள் அனைவருக்குள்ளும் ஒரு பாடகர் இருக்கிறார்' எனப் பாராட்டியுள்ளார்.
சோனுவும், மற்ற பயணிகளும் பாடும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து, விமான ஊழியர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மைக் உள்ளிட்ட அறிவிப்பு சாதனத்தை எப்படி பயணிகள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம் எனக் கண்டனம் எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ இது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட 5 பணிப்பெண்களையும் சஸ்பெண்ட் செய்து ஜெட் ஏர்வேஸ் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சோனு நிகாம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘விமானத்தில் இதுபோன்று சில கச்சேரிகள், வேடிக்கை நிகழ்சிகள் என மற்ற நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், என்னை பாட வைத்ததற்காக விமான ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை உணமையான சகிப்பின்மை' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications