ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் வாதாடுவதில்லை.. எதிர்ப்பால் பின்வாங்கிய காங்கிரசின் அபிஷேக் சிங்வி
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதிடப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக வரலாறு காணாத யுக புரட்சியை நடத்திக் காட்டியது தமிழக இளைஞர் சமூகம். இதன்விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை முதலில் தமிழக அரசு கொண்டுவந்தது.
பின்னர் நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இம்மனுவை நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராவதாக கூறப்பட்டது. அவர் அளித்த பேட்டியிலும் இதை உறுதி செய்தார். ஜல்லிக்கட்டு சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் அபிகேஷ் சிங்விக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பதால், தமிழக காங்கிரஸ் கட்சி இந்த சிக்கலில் தங்கள் தலை உருண்டு பாதிப்பு ஏற்படுவதை விரும்பவில்லை. இதையடுத்து சிங்விக்கு மேலிடம் மூலம் நெருக்கடி கொடுத்துள்ளது தமிழக காங்கிரஸ்.
ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம். அதற்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் தமிழினத்தின் எதிரிகள் என்று குறிப்பிட்டார் தமிழக இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மோகன் குமாரமங்கலம்.
இதையடுத்து அபிஷேக் மனு சிங்வி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் ஆஜராகுவதில்லை என அறிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இதுபற்றி கூறிய அவர், விலங்குகள் நல அமைப்புகளுடன் நீண்டகாலமாக நான் தொடர்பில் இருந்து வருகிறேன். இருப்பினும் தமிழக காங்கிரஸ் உணர்வு எனக்கு அதைவிட முக்கியம் என்பதால் வழக்கில் ஆஜராகும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளேன் என்றார் அவர்.