கூட்டணி ஆட்சிக் காலம் மலையேறி விட்டது.. ஒற்றைக் கட்சி ஆட்சியே சிறந்தது: பிரதமர் மோடி
மும்பை: இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் மலையேறிவிட்டது..இனி ஒற்றைக் கட்சி தலைமையில் அமையும் அரசால் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள கோண்டியா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

சுரண்டிய காங். கூட்டணி
மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, இந்த மாநிலத்தின் பணத்தை மட்டும் சுரண்டவில்லை. பெருமையையும் சேர்த்து சுரண்டி எடுத்து விட்டது.

குதித்த தேசியவாத காங்.
அந்த கூட்டணி அரசானது, மூழ்கும் கப்பல் என்பதை உணர்ந்ததும், தேசியவாத காங்கிரஸ் கட்சி அந்த கப்பலில் இருந்து குதித்து விட்டது.

ஒற்றைக் கட்சி ஆட்சி
மத்தியில் ஒற்றைக் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால் இது நிலையான ஆட்சி என்பதை ஒட்டுமொத்த உலகமே உணர்ந்துக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சி
உங்களுக்கு முன்னேற்றம் தேவை என்றால், அதற்கு ஒற்றைக் கட்சியின் தலைமையிலான ஆட்சி முறைதான் சிறந்தது. மத்தியில் பா.ஜ.க.ஆட்சி, மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. ஆட்சி என்றிருந்தால் அது எல்லா வகையிலும் பொருத்தமான ஆட்சியாக இருக்கும்.

மலையேறிய கூட்டணி ஆட்சி
கூட்டணி ஆட்சிக் காலம் எல்லாம் மலையேறி விட்டது. ஒற்றைக் கட்சியின் தலைமையில் அமையும் அரசால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications