நீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
நீதிபதி லோயா மரணத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
டெல்லி : நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதித்துறையை களங்கப்படுத்தும் உள்நோக்கத்துடன் சிறப்பு விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா, கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி அமித்ஷாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரதத் உள்ளிட்டோர் அமர்வு கடந்த மார்ச் 16ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புகள் அனைத்தையும் நிறுத்தி வைத்தனர்.
மஹாராஷ்டிரா அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தனி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று கூறியுள்ளது. ஆனால் நீதிபதி லோயா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடக்கவில்லை என்பதால் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணை அவசியம் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் தஷ்வந்த் தவே நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்ற வாதிட்டார். அவருடைய மரணம் இயற்கையானது தானா என்ற சந்தேகம் இருப்பதாகவும் தவே கூறினார். தவேவின் வாதத்தை அடுத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுவிட்டது, அவருடைய மரணம் இயற்கையானது தான் என்றும் அதில் தெளிவாக உள்ளது எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி 12ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அனைத்தும் ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது நீதிபதி லோயா மரண வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.