மும்பை: கடலில் மூழ்கி 6 வர்த்தகர்கள் பலி... சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்
மும்பை: மும்பை அருகே கடலில் குளிக்க சென்ற ஆறு வர்த்தகர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியைச் சேர்ந்த பதினைந்து வர்த்தகர்கள், நேற்று ஒரே குழுவாக இணைந்து ராய்ஹட் மாவட்டத்தில் உள்ள முரட் பகுதியில் உள்ள ஏகடாரா கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
கடலில் இறங்கி அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆறு பேர் நீரில் மூழ்கினர். நண்பர்கள் கடல் நீரில் மூழ்குவதைக் கண்ட மற்ற வர்த்தகர்கள் உதவி கேட்டு உரக்க சத்தமிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
ஆனபோதும், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. பின்னர் மதியம் சுமார் 2 மணி அளவில் நீரில் மூழ்கிப் பலியான ஆறு பேரின் உடல்களும் ஒன்றன் பின் ஒன்றாக கரை ஒதுக்கியது.
நீரில் மூழ்கிப் பலியானவர்களின் உடல்கள் தற்போது முரட் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications