நடிகை ஹேமமாலினியின் ஹெலிகாப்டர் மீது செருப்பை வீசிய பீகார் மக்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற நடிகை ஹேமமாலினியின் ஹெலிகாப்டர் மீது மக்கள் செருப்புகளை வீசினர்.
பீகார் மாநிலம் மோதிஹரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மோகன் சிங்குக்கு ஆதரவாக நடிகை ஹேமமாலினி பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் மற்றும் சமூக தீமைகளை பார்த்து மக்கள் வெறுத்துப் போய்விட்டனர். இந்நிலை மாற ஊழல் இல்லா ஆட்சியை அமைக்க மோடியால் மட்டும் தான் முடியும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மாநிலத்தை பின்நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்றார்.
இதையடுத்து அவர் பீட்டைய்யா என்ற தொகுதியில் வாக்கு சேகரித்துவிட்டு கிளம்பினார். அப்போது அவரை பார்க்க மக்கள் முண்டியடித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ஹேமமாலினியின் ஹெலிகாப்டர் மீது செருப்புகளை வீசினர்.