டெல்லி முதல்வர் பதவிக்கு ஸ்மிருதி இரானியை நிறுத்துகிறது பாஜக?
டெல்லி: அடுத்தாண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.

ஆனால் ஒன்றரை மாத காலம் ஆட்சி நடத்திய கெஜ்ரிவால், பொசுக்கென்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் விருப்பம் தெரிவிக்காததால், சட்டசபை கலைக்கப்படுகிறது. டெல்லியில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஆம் ஆத்மி:
தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆம் ஆத்மி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக ஆம் ஆத்மி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்தியில் புதிய ஆட்சி அமைத்துள்ள பாஜக ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே, டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் நிச்சயம் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது.
எனவே, இம்முறை தங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளராக மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை அவர்கள் களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கட்சித் தலைமையின் கணக்கு:
ஏற்கனவே, டெல்லி முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஹர்ஷ்வர்தன், சதீஷ் உபாத்யாய், ஜெகதீஷ் முகி மற்றும் விஜய் கோயல் ஆகியோரது பெயர்கள் உள்ளன. ஆனால், அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி இரானி டெல்லி முதல்வர் வேட்பாளர் ஆவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மிருதி இரானியை எப்படியும் வெற்றி பெறச் செய்து டெல்லி மக்கள் முதல்வராக்கி விடுவார்கள் என கட்சித் தலைமை கணக்குப் போடுகிறதாம்.
இதற்கிடையே, டெல்லி பாஜக தலைவர்களிடையே நிலவும் உட்கட்சிப் பூசலால் கட்சித் தலைவர் அமீத் ஷா கடும் அதிருப்தியடைந்துள்ளார். தலைவர்கள் அனைவரையும் கூப்பிட்டு கூட்டம் நடத்திய அவர், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும். கடந்த தேர்தலில் யாரும் ஒருங்கிணைந்து செயல்படாத காரணத்தால்தான் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டதாக சத்தம் போட்டாராம்.
இந்த உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான் இரானியை உள்ளே கொண்டு வருகிறார்களாம். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஸ்மிருதி இரானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications