மும்பை மின்சார ரயிலில் புகுந்த பாம்பு.. பயத்தில் பதறிய பயணிகள்
மும்பை மின்சார ரயிலில் புகுந்த பச்சைப் பாம்பைக் கண்ட பயணிகள் பயத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை: மும்பையில் இயக்கப்படும் மின்சார ரயிலில் பச்சை பாம்பு ஒன்று உள்ளே புகுந்ததால் அந்த ரயில் பெட்டியிலிருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் பதறிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
மும்பை தித்வாலா ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையத்துக்கு சென்ற உள்ளூர் மின்சார ரயில் நேற்று காலை 8.33 மணிக்கு தானே ரயில் நிலையம் அடைந்தது. அப்போது, ஒரு ரயில் பெட்டியில் பயணிகளிடமிருந்து பாம்பு பாம்பு என்ற கூச்சலும் அலறலும் கேட்டது. இதையடுத்து ரயில்வே போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் எச்சரிக்கை அடைந்தார்கள்.

அங்கே ரயில் பெட்டிக்குள் பயணிகள் கைப்பிடி கம்பிகளுக்கு மேல் ஒரு பச்சை பாம்பு இருந்தது. எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் மும்பை உள்ளூர் ரயிலில் எப்படி இந்த பச்சை பாம்பு உள்ளே வந்தது என்று தெரியவில்லை.
அந்த ரயில் பெட்டிக்கு விரைந்து வந்த ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்த பச்சை பாம்பை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தினர்.
ரயில் பெட்டியில் இருந்த பச்சை பாம்பு அகற்றப்பட்ட பின் ரயில் பயணிகள் மீண்டும் அந்த பெட்டியில் பயணம் செய்தனர். ரயில் பெட்டியில் பச்சை பாம்பு நுழைந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளால் வீடியோ படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே செய்திதொடர்பாளர் கூறுகையில், இதை யாரேனும் விளையாட்டாக செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ரயில் ஏற்கெனவே இரண்டு முறை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று இறக்கிவிட்டு வந்துள்ளது. அதனால், பயணிகளுக்கு தெரியாமல் திடீரென பச்சை பாம்பு ரயில் பெட்டியில் நுழைந்திருக்க முடியாது. அதனால், பாம்பு எப்படி திடீரென ரயில் பெட்டிக்குள் நுழைந்தது என்பது குறித்து ரயில் பெட்டியில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications