ஷாருக் கான் பட பாணியில் ஸ்னாப்டீல் ஊழியையை கடத்திய "சைக்கோ " கைது
காசியாபாத்: வேலை முடிந்து வீட்டிற்கு செல்கையில் ஸ்னாப்டீல் ஊழியை தீப்தி சர்னாவை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஷாருக்கானின் படமான டர்ர் பாணியில் தீப்தியை பின் தொடர்ந்து கடத்தியதாக முக்கிய குற்றவாளி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த தீப்தி சர்னா(24) என்பவர் குர்காவ்னில் உள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தீப்தி காசியாபாத்தில் மாயமானார்.
அவர் சென்ற ஆட்டோ பழுதாகவே அவர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில் 4 ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். தீப்தி ஆட்டோவில் ஏறியதும் அந்த 4 ஆண்கள் மற்றொரு பெண்ணை கத்தியை காட்டி கீழே இறக்கிவிட்டு தீப்தியின் கண்ணை துணியால் கட்டியுள்ளனர்.
சிறுது தூரம் சென்ற பிறகு அவர்கள் தீப்தியை காரில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர். அவருக்கு உணவும், ஸ்நாக்ஸும் அளித்துள்ளனர். 30 மணிநேரம் கழித்து அவரை விடுவித்துவிட்டனர்.
ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்த தேவேந்தர் என்பவர் ஷாருக்கான் சைக்கோவாக நடித்த டர்ர் படத்தை பார்த்துவிட்டு அதே பாணியில் தீப்தியை ஒருதலையாக காதலித்ததுடன் அவரை பல நாட்களாக பின்தொடர்ந்துள்ளார். தீப்தியை கடத்தும் முன்பு தேவேந்திரா அவரை 150 முறை பின்தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தான் அவர் 4 பேர் உதவியுடன் தீப்தியை கடத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திரா உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
வழக்கு ஒன்றில் ஹரியானா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேவேந்திரா அங்கிருந்து தப்பியுள்ளார். அவர் ஒரு சைக்கோ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.