உகாண்டா பெண்களிடம் 'சேஷ்டை'...ஆம் ஆத்மி 'சோம்நாத் பார்தி' உட்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை!
டெல்லி: உகாண்டா நாட்டு பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி உட்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தியின் தொகுதியில், உகண்டா நாட்டு பெண்கள் 7 பேர் பாலியல் தொழில் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தி ஜனவரி 15-ந்தேதி நள்ளிரவில் அப்பகுதி மக்களுடன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் குறித்த மருத்துவ பரிசோதனையில் அதற்கான அறிகுறி இல்லை என்று மருத்துவமனை கூறியது. இதையடுத்து உகண்டா பெண்கள், தங்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் சென்றது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சோம்நாத் பார்தி உட்பட 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 100 பக்கம் அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 9 ஆப்பிரிக்கா பெண்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications