ரயில்வே வேலை ஆசை.. ஓய்வு பெற இருந்த அப்பாவைக் கொல்ல முயற்சித்த மகன் கைது!
ரயில்வே வேலைக்காக அப்பாவைக் கொல்ல முயற்சித்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா: ரயில்வே வேலையில் சேரும் ஆசையில் தன் தந்தையையே கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சித்த மகனை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் மண்டல். ஜமல்பூர் ரயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்த ஓம் பிரகாஷ், இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், கடந்தவாரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் அவரது கையில் மட்டுமே காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதால், உயிர் தப்பினார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுனில்குமார் மற்றும் ரவிரஞ்சன் குமார் என்ற கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமானது.
அதாவது, ஓம் பிரகாஷின் இளைய மகன் பவன்குமார் தான் கூலிப்படை மூலம் தன் தந்தையைக் கொல்ல திட்டமிட்டது தெரிய வந்தது. இதற்காக கூலிப்படையினருக்கு ரூ. 2 லட்சம் தருவதாக அவர் பேரம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பவன்குமாரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
நீண்டகாலமாக அரசு வேலைக்காக போராடி வந்துள்ளார் பவன். ஆனால் எதுவும் கிடைக்கைவில்லை. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் பணி ஓய்வு பெறப்போகும் தன் அப்பாவை தீர்த்துக் கட்டினால், அவரது ரயில்வே வேலை தனக்கு கிடைக்கும் என அவர் திட்டமிட்டுள்ளார். எவனே கூலிப்படை மூலம் தன் தந்தையைக் கொல்ல அவர் திட்டமிட்டார். ஆனால், தற்போது தன் குறுக்கு வழி முயற்சியால் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications