முஸ்லிம் ஓட்டுகள் பிரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. சோனியா வேண்டுகோளால் சர்ச்சை
டெல்லி: முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வாக்குகளை பிரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாக வெளியான செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி உள்ளிட்ட முஸ்லிம் மதத் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது லோக்சபா தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு சோனியா கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் சோனியா விடுத்த இந்த வேண்டுகோள் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், மதத்தின் அடிப்படையில் அல்லாமல் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. சோனியா காந்தி சிறுபான்மையினரை இவ்வாறு கேட்டுக்கொள்வது அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும். இது காங்கிரசின் மதவாத அரசியலை தெளிவாக காட்டுகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஆனால் இதை சோனியா காந்தி நிராகரித்துள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த புகார் ஒரு நல்ல ஜோக் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸுக்கு ஆதரவு!
இதனிடையே லோக்சபா தேர்தலில் காங்கிரஸையே ஆதரிப்போம் என்று டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி அறிவித்துள்ளார். இது குறித்து டெல்லி ஜூம்மா மசூதியின் செய்தித் தொடர்பாளர் ரஹத் மெக்மூத் செளத்ரி, சோனியாவுடனனா சந்திப்பின் போது இஸ்லாமிய இளைஞர்கள் கைது, கல்வியில் இடஒதுகீட்டு, சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நிறைவேற்றம், ரங்கநாத் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கள் பற்றி விவாதித்தோம் என்றார்.
புகாரியின் ஆதரவு அறிவிப்பு காங்கிரஸுக்கு பெரும் பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications