இப்தார் நோன்பு... அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்த சோனியா... அதிர்ச்சியில் திமுக
டெல்லி: இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க வருமாறு தி.மு.க.வுக்கு அழைப்பு அனுப்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா அ.தி.மு.க.வுக்கும் அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார். இது தி.மு.க.வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் என தெரிகிறது.

இந்த கூட்டத் தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நாளை மறுநாள் நடக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதாவைத் தவிர பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கை கோர்க்க திமுக தயார் என்று அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசிவரும் நிலையில், தி.மு.க.வுக்கு இப்தார் விருந்தில் கலந்து கொள்ள சோனியா அழைப்பு விடுத்திருக்கிறார். இது கூட்டணிக்கான கிரீன் சிக்னல் என திமுக கருதிக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் தற்போது அதிமுகவுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் வேணுகோபாலுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் அதிமுக பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications