விரைவில் காஷ்மீரில் போராடுவோம்: அல் கொய்தா இந்திய கிளை தலைவர்
டெல்லி: அல் கொய்தா அமைப்பின் பத்திரிக்கையில் காஷ்மீர், உத்தர பிரதேசம், சீனா, வங்கதேசம் பற்றி தீவிரவாதிகள் கருத்து தெரிவித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
அல் கொய்தா அமைப்பு பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறது. அந்த பத்திரிக்கையின் சமீபத்திய வெளியீட்டில் உத்தர பிரதேசம், காஷ்மீர், வங்கதேசம் மற்றும் சீனா பற்றி தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
117 பக்கங்கள் கொண்ட அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
புர்த்வான்
அல் கொய்தா பத்திரிக்கையில் மேற்கு வங்கத்தில் உள்ள புர்த்வானில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி பேசப்பட்டுள்ளது.
அவாமி லீக்
வங்க தேசத்தில் உள்ள அவாமி லீக் கட்சியை உடனே ஆட்சியில் இருந்து தூக்க வேண்டும். வங்க தேசத்தில் இந்து நாட்டை உருவாக்குகிறது அவாமி லீக் என அல் கொய்தாவின் இந்திய கிளையின் தலைவர் ஆசிம் உமர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்
டாக்காவில் பார்த்தால் பல இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்துத்துவம் என்பது வங்கதேசத்தில் புற்றுநோய் போன்று பரவிக் கொண்டிருக்கிறது. அவாமி லீக் இருக்கும் வரையில் இந்த புற்றுநோய் பரவத் தான் செய்யும். அதனால் அவாமி லீக்கை தூக்கி எறிய முஸ்லீம் சகோதரர்கள் முன்வர வேண்டும் என்று ஆசிம் உமர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தொழிற்சாலைகளை துவங்கியபோது வங்கதேச ஜமாத்துல் முஜாஹிதீனும் இதையே தான் தெரிவித்தது.
அல் கொய்தா
அல் கொய்தாவின் ஆதரவின்றி வங்கதேச ஜமாத்துல் முஜாஹிதீனால் தனியாக தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க முடியாது என்கிறது மத்திய உளவுத் துறை.
சீனா
சீனாவின் ஜின்ஜியாங் பகுதி முஸ்லீம்கள் பகுதியாகும் என்கிறது அல் கொய்தா. அல் கொய்தா சீனா மீது ஈடுபாடு காட்டி வருவதாக மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தை பரப்ப அல் கொய்தா முயற்சி செய்து வருகிறது.
உ.பி.
முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு ஷாமிலி முகாம்களில் தங்கியிருக்கும் முஸ்லீம்கள் பற்றி அந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு ஷாமிலி முகாம்வாசிகளை உமர் கேட்டுக் கொண்டுள்ளார். உங்கள் இடத்திலேயே நீங்கள் அகதிகள், தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தப்படுகிறீர்கள். வரலாற்றை திரும்பிப் பாருங்கள் 1857ம் ஆண்டு நடந்த போர் உங்களுக்கு போராட கற்றுத் தரும் என்று உமர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்
ஆப்கானிஸ்தானில் நாங்கள் இஸ்லாத்திற்காக ரத்தம் சிந்தி போராடுகிறோம். விரைவில் காஷ்மீரிலும் போராடுவோம். இந்த போரில் ஷரியா சட்டம் பயன்படுத்தப்படும். ஷரியா சட்டத்தை அறிமுகப்படுத்தவே இந்திய கிளையை துவங்கியுள்ளோம் என உமர் தெரிவித்துள்ளார்.