வடக்கே போகிறது வரி வருவாய்.. உடனே கூடுவோம் வாங்க.. ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவும் அழைப்பு
திருவனந்தபுரம்: தென் மாநிலங்களின் வரி வருவாய் எப்படி வட இந்தியாவிற்கு செலவிடப்படுகிறது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், தென் மாநில நிதி அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தென் மாநில நிதி, வட மாநிலங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குரல் எழுப்பினார். இதையடுத்து தென் மாநிலங்களுக்கு நிதி குறைக்கும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அனைத்து தென் மாநில நிதி அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 10ம் தேதி தென் மாநில நிதி அமைச்சர்கள் இணைந்து, வட மாநிலங்களுக்கு எப்படி தென் மாநில நிதி கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி ஆலோசிக்கலாம் என ஐசக் கோரியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கொள்கை அளவில் இதற்கு அனைத்து தென் மாநில, நிதி அமைச்சர்களும், சம்மதம் தெரிவித்துவிட்டனர். இன்னும் எழுத்துப்பூர்வ பதில் வரவில்லை என்று கூறியுள்ளார். தென் மாநிலங்கள்தான் அதிக அளவில் வரி வருவாயை ஈட்டித் தருகின்றன. ஆனால் தென் மாநிலங்களுக்கு நிதியை குறைத்துவிட்டு, வரி வருவாயை ஈட்டித் தராத வட மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.