மோடி மாலை அணிவித்த மாளவியா சிலையை கங்கை நீரில் கழுவிய சமாஜ்வாடி தொண்டர்கள்!!
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மாலை அணிவித்த பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலையை கங்கை நீரைக் கொண்டு சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் கழுவிவிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த மோடி, அங்கு பனாரஜ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
ஆனால் பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மோடி மாலை அணிவித்தற்கு சமாஜ்வாடி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலை முன்பாக சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் ஒன்று திரண்டனர்.
அதைத் தொடர்ந்து மாளவியா சிலைக்கு மோடி மாலை அணிவித்ததை ஏற்க முடியாது என்று கூறி அந்த சிலையை கங்கை நீரால் கழுவி தூய்மைப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.