2ஜி: கலைஞர் டிவி தொடர்பான மேலும் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது ஆம் ஆத்மி!!
2ஜி: கலைஞர் டிவி தொடர்பான மேலும் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது ஆம் ஆத்மி!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான மேலும் பல தொலைபேசி உரையாடல்களை டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. அத்துடன் கனிமொழியை காப்பாற்றும் வகையிலான இந்த சதி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கெனவே அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் சேர்க்கப்பட்டு அது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் சில நாட்களுக்கு முன் ஒரு இணையத்தளத்தில் வெளியானது.

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகியான சரத் ரெட்டி மற்றும் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் இடையே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருந்தது.
அதில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வருவதற்கு முன்பாகவே தாம் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களில் தான் பின் தேதியிட்டு கையெழுத்திட்டு வருவதாக சரத் ரெட்டி கூறுவது பதிவாகி இருக்கிறது. (ஆனால், இந்த உரையாடலில் பேசுவது ஜாபர் சேட், சரத் ரெட்டி தானா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது)
புதிய டேப்புகள்- விசாரணை தேவை
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான மேலும் பல தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டார்.
அதில் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மற்றும் கருணாநிதியின் உதவியாளர் சண்முக நாதன் ஆகியோருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்றும் அடக்கம். இது குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷன், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியை பாதுகாக்கும் சதியையே இந்த தொலைபேசி உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
கனிமொழியின் தொண்டு நிறுவனத்துக்கு டாடா நிறுவனம் ரூ20 லட்சம் நன்கொடை கொடுத்ததும் இதில் பதிவாகியுள்ளது. மேலும் கலைஞர் டிவிக்கான ரூ200 கோடி பண பரிவர்த்தனை தொடர்பான தகவலும் இந்த தொலைபேசி உரையாடலில் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு பணப்பரிவர்த்தனம் நடந்தது என்பது திமுக தலைவர் கருணாநிதிக்கும் தெரியும் என்பதை இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக கருணாநிதியாக இருந்தாலும் டாடாவாக இருந்தாலும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
கருத்து கூற சரத் ரெட்டி மறுப்பு
இந்த தொலைபேசி உரையாடல்கள் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கலைஞர் டிவியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பிரசாந்த் பூஷன் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது என்றும் அதை கேட்ட பிறகு தான் என்னால் பதில் சொல்ல முடியும். மேலும், இந்த விஷயம் கோர்ட்டில் உள்ளது. எனவே, அது குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றார் சரத்.












Click it and Unblock the Notifications