பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணம்! பிப்.15ல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!
டெல்லி: நான்கு நாள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வரும் 15ம் தேதி இந்தியா வருகிறார்.
இலங்கையின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மைத்ரிபால சிறிசேனா இந்தியா வருகிறார். பிப்ரவரி 15ம் தேதி முதல் நான்கு நாட்கள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.

தனது பயணத்தின் போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய மறு கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதர அரசியல் கட்சி தலைவர்களையும் சிறிசேனா சந்திக்க உள்ளார். இதைத் தொடர்ந்து புத்த கயா புத்தர் கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் சிறிசேனா செல்லவுள்ளார்.
ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவு சீர்கெட்டிருந்தது. அதை சீர்படுத்துவதற்காக, சிறிசேனா வருகிறார். இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக அவர் ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறிசேனாவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications