மோடி பதவியேற்பு விழாவில் 'சர்ச்சை' சாமியார்கள்... அதிர வைத்த ஜெய் ஸ்ரீராம் கோஷம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் குண்டுவெடிப்பு, மத கலவர வழக்குகளில் சிக்கிய சாமியார்கள், பிரமுகர்கள் முன்வரிசையில் அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் விழாவில் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதே நேரத்தில் பாரதிய ஜனதாவின் தாய் மற்றும் சேய் அமைப்புகளைச் சேர்ந்த சாமியார்களும் பெருமளவில் வரவழைக்கப்பட்டனர். அதுவும் அவர்களுக்கு முன்வரிசைகளில் இடம் ஒதுக்கப்பட்டு ஏக மரியாதை அளிக்கப்பட்டது.
காவி உடையில்...
காவி உடை, தலைப்பாகை, தண்டம் சகிதமாகத்தான் இந்த சாமியார்கள் பதவியேற்பு விழாவுக்கும் வந்திருந்தனர்.
யார்? யார்?
வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், அம்பானிகளுக்கு நெருக்கமான ரமேஷ் ஓஜா, பாபா ராம்தேவின் தளபதி ஆச்சார்யா பாலகிருஷ்ணா, பையூஜி மகாராஜ் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
சர்ச்சை சாத்வி
1990களில் சர்ச்சைக்குரிய பெண் சாமியாராக வலம் வந்த சாத்வி ரிதம்பரா 2வது வரிசையில் அமர்ந்து இருந்தார். இவர்தான் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவர். பாபர் மசூதி இடிப்பு, மத கலவர வழக்குகளில் அதிகம் சிக்கியவர்.
போன வாரம் விசாரணை.. இன்று பதவியேற்பு விஐபி
2007ஆம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த வாரம் கூட சிபிஐ விசாரணைக்குப் போய்விட்டு வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்தரேஷ்குமாரும் இதில் கலந்து கொண்டார்.
காலில் விழுந்து ஆசீர்வாதம்
பாரதிய ஜனதாவின் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் சாமியார்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டே தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர்.
விண்ணைப் பிளந்த கோஷங்கள்
அதேபோல் வந்தே மாதாரம், பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் ஆகிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
குஜராத் முஸ்லிம்கள்
இந்த பதவியேற்பு விழாவில் முக்கிய அம்சமாக குஜராத்தைச் சேர்ந்த தாவூதி போரா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் கணிசமாக பங்கேற்றனர். மோடியின் முஸ்லிம் ஆலோசகரும் குஜராத் தொழிலதிபருமா ஜாஃபர் சரேஷ்வாலாவும் வந்திருந்தார். அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அருகே அமர்ந்திருந்தார்.