டெல்லியில் போராட்டம் நடத்துவதை கைவிடுங்கள்.. தமிழக விவசாயிகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை
தமிழக விவசாயிகள் டெல்லியில் தங்களை வருத்திக் கொண்டு போராடி வருவதைக் கண்டால் நெஞ்சு பதை பதைக்கிறது என்றும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னை: தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2ம் கட்டமாகத் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அரை நிர்வாணத்தோடு, கையில் சங்கிலி போட்டுக் கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார். மேலும், தமிழக விவசாயிகள் தங்களை வருத்திக் கொள்வதைக் காண நெஞ்சம் பதை பதைக்கிறது என்றும் ஸ்டாலின் உருக்கமாகக் கூறியுள்ளார்.
விரைவில் திமுக ஆட்சி அமைந்து விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.