அசத்தல் ரோஜா… அதிரடி விஜயசாந்தி: ஆந்திர அரசியலில் கலக்கும் நாயகிகள்
ஹைதராபாத்: தெலுங்கானா, சீமாந்திரா மாநிலங்களில் லோக்சபா தேர்தல், சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
தகிக்கும் வெப்பத்தில் அரசியல் பிரமுகர்களும், நடிகர், நடிகையர்களும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சிரஞ்சீவி, ராஜசேகர், பவன்கல்யாண், ராம்சரண் தேஜா, நட்சத்திரங்கள் ஊர் ஊராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, ஜெயசுதா என பலரும் பிரசாரத்தில் அனல்பறக்க பேசிவருகின்றனர். வெயிலோ, குளிர்ந்த மாலைப் பொழுதே நடிகைகளைக் காண கூட்டம் குவிகிறது.
நகரியில் அசத்தும் ரோஜா
இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார்.
வீடு வீடாக ஓட்டு
அவர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் ரோஜா உடன் 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள், பெண்களும் செல்கின்றனர்.
இலவச மின்சாரம்
நெசவாளர்கள் நிரம்பிய நகரி தொகுதியில் அவர்களுக்காக நெசவு பூங்கா அமைத்து தருவேன். தமிழகத்தை போல நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வேன். தடையில்லா மின்சாரம் வழங்க ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ரோஜா கேட்கும் அழகே தனிதான். தெலுங்கு தேசம் கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் வெளுத்து வாங்குகிறார்.
வேட்புமனுவின் போதே...
கடந்த வாரம் நகரியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போதே மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் பேரணியாக சென்று ரோஜாவிற்கு உற்சாகமளித்தனர்.
குடும்பத்தில் ஒருத்தியாக...
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன் மோகனை முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார். நான் வெற்றி பெற்றால் குடும்பத்தில் ஒருத்தியாக, சகோதரியாக இருந்து பணிபுரிவேன் என்று அப்போது வாக்குறுதி அளித்தார் ரோஜா.
சாக்ஷி டிவியில்...
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தும் சாக்ஷி டிவியை ஆன் செய்தாலே போதும் சும்மா பிரசாரம் அலறுகிறது. ஒருபக்கம் ரோஜா, மறுபக்கம் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் உற்சாகமாக வாக்கு சேகரிக்கின்றனர்.
அடிதடி நாயகி விஜயசாந்தி
சினிமாவில் அடிதடி சண்டைக் காட்சிகளில் அதகளப் படுத்திய நடிகை விஜயசாந்தி தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக உள்ளார். அங்குள்ள மேடக் தொகுதியில் போட்டியிடும் அவர் தனது ஸ்டைல், உடை என அனைத்தையும் மாற்றிக்கொண்டுள்ளார்.
உற்சாக வரவேற்பு
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் உடை அலங்காரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜயசாந்திக்கு வரவேற்பு அதிகமாகியுள்ளது. பிரசாரத்தின் போது, தெலுங்கானாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் அலை வீசுகிறது என்றம் தெரிவித்துள்ளார்.
கூல் ஜெயசுதா
செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயசுதா தனது தொகுதியில் தான் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார். ஏற்கனவே தொகுதி மக்களுக்கு அறிமுகமாகி வெற்றி பெற்றவர் என்பதால் கூலாக வாக்கு சேகரிக்கிறார். தனது தோழி ஜெயப்பிரதாவையும் அழைத்து வந்து அசத்தினார் ஜெயசுதா.
ஜீவிதா ராஜசேகர்
தமிழ் நடிகை ஜீவிதா, தனது கணவர் டாக்டர் ராஜசேகருடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.