நடுவானில் ‘பறந்து’ கொண்டே வித்தியாசமாக யோகா தினத்தைக் கொண்டாட ஏர் இந்தியா திட்டம்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை பறந்து கொண்டே வித்தியாசமாக கொண்டாட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப் பட உள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும் யோகா தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் யோகா குறித்த திரைப்படங்களை இந்தியா முழுவதிலுமுள்ள ஏர் இந்தியா விமானத்தில் ஒளிபரப்ப ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

மேலும் ஏர் இந்தியாவில் பணிபுரியும் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு, யோகா மற்றும் தியான நிகழ்ச்சிகளையும் நடத்திட அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அனைத்து பணியாளர்களும் தினசரி யோகாவை பயிற்சி செய்து வந்தால் அவர்களின் வாழ்க்கை முறை உற்சாகமானதாக மாறும். யோகா தினத்திற்கான பிரதமரின் ஆதரவையும் அவரது கூட்டு அழைப்பையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்" என்றார்.
விமானம் பறக்கும்போது விமானிகளும் யோகா செய்வார்களா என்பது குறித்து ஏர் இந்தியா எதுவும் சொல்லவில்லை.!












Click it and Unblock the Notifications