இலங்கையில் இருந்து மீனவர்களுடன் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: இலங்கையில் இருந்து மீனவர்களுடன் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படும் மீனவர்களோடு அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவருடன் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மீனவர்களோடு அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதி அளித்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.